தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு பரவுகிறது: ஆய்வில் தகவல்!
தவளை இனப்பெருக்க அழிவால் பரவுகிறது டெங்கு
தமிழகத்தில் தவளைகள் இனப்பெருக்கும் குறைந்ததால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல்களின் தாக்கம் வேகமாகப் பரவி வருகிறது.
டெங்கு, மலேரியாவுக்குப் பலர் உயிர் இழந்து வருகின்றனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல்கள் தாக்கி சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்த வகைக் காய்ச்சல்கள் அனைத்தும் கொசுக்கள் மூலமே பரவுகின்றன. கொசுக்களை அழிக்கும் தவளைகள் இனப்பெருக்கம் குறைந்து அந்த இனமே அழிந்து வருவதால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதற்கு முக்கிய காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கிராமங்கள், நகரங்களில் குளங்கள், குட்டைகள், ஏரிகள், திறந்த வெளிக் கிணறுகள் அதிகமாகக் காணப்பட்டன. நீர்நிலைகளில் தவளைகள் அதிகமாக உயிர் வாழ்ந்தன. பருவ மழைகளும் அதிக அளவு பெய்தன. அதனால், தவளைகள் இனப்பெருக்கம் அதிகமாகக் காணப்பட்டது.
தவளைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை. தவளையின் முட்டையில் இருந்து வெளியே வரும் குஞ்சுகளுக்கு (தலபிரட்டை) கொசுக்கள்தான் முக்கிய உணவு. தலபிரட்டைகள் கொசுக்களை சாப்பிட்டு உயிர் வாழும்.
அதனால், கடந்த காலத்தில் கொசுக்கள் இனப்பெருக்கம் கட்டுக்குள் இருந்தது. அதன் மூலம் நோய்களும் மிகக் குறைவாகக் காணப்பட்டன.
தற்போது பள்ளி, கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளுக்கும், மாணவர்கள் ஆய்வுக்காக தவளைகளை பிடித்துக் கொன்று வருகின்றனர்.
கிராம, நகரப் பகுதிகளில் குளம், குட்டைகள், ஏரிகள், கிணறுகள் பார்ப்பது அபூர்வமாக மாறி விட்டது. மழையளவும் குறைந்து விட்டது. அதனால், வாழ்விடங்கள் சுருங்கி தவளை இனப்பெருக்கம் குறைந்து, அழிந்து வருகிறது.
இதுதவிர சீனாவில் தவளை கறியை அந்நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால், அந்நாட்டிற்கு ஒரு தவளை ரூ.10, ரூ.20க்கு இங்குள்ளவர்கள் பிடித்து அனுப்பினர். இவ்வாறு பல்வேறு காரணங்களால் தவளை இனம் தற்போது 70 சதவீதம் அழிந்துவிட்டது. அதனால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி மர்ம நோய்கள் வரத்தொடங்கி விட்டன.
அனைத்து உயிரினங்களையும் சம விகிதத்தில் பாதுகாக்கப் பொதுமக்கள், அரசு நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்தா மட்டுமே எதிர்கால தலைமறையினரை மர்ம நோய் தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற முடியும்.
Comments
Post a Comment